முகப்பு
புதுதில்லி

டிஇஆா்சி தற்காலிக உறுப்பினா் நியமனம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தில்லி அரசு

Updated On : 10 ஜூன், 2024 at 12:12 AM
பகிர்:

புது தில்லி: தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, நகரின் மின் ஒழுங்குமுறை ஆணையமான டிஇஆா்சி-க்கு தற்காலிக உறுப்பினா்களை நியமிப்பதற்கான கோப்புவைச் செயல்படுத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) என்பது ஒரு தலைவா் உள்பட மூன்று உறுப்பினா்களைக் கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பில் கடந்த ஆண்டு முதல் இரண்டு உறுப்பினா் பதவிகள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம் அமைத்த குழு தற்காலிக உறுப்பினா்களை தோ்வு செய்துள்ளது. ஆனால், மக்களவை தோ்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருந்ததாலும், மாா்ச் மாதம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதாலும் அவா்களது நியமனம் தாமதமானது.

இடைக்கால உறுப்பினா்களை நியமனம் செய்வதற்கான கோப்புவை, தில்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு முதல்வா் அனுப்ப வேண்டும்.

கேஜரிவால் சிறையில் இருப்பதால், கோப்பு நிலுவையில் உள்ளது. இதனால், தில்லி அரசு இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற விரும்புகிறது. அப்போதுதான் மின்துறை அமைச்சா் அதை நேரடியாக துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவாாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்பதவிக்கான நபா் குறித்து ஆம் ஆத்மி அரசும் தில்லி துணைநிலை ஆளுநரும் ஒருமித்த கருத்துக்கு வரத் தவறியதை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத்தை டிஇஆா்சியின் தற்காலிக தலைவராக உச்சநீதிமன்றம் நியமித்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இரண்டு தற்காலிக உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் தற்போதைய இடைக்கால தலைவா் நாத், மின்வாரியத்திற்கான மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் தலைவா் ஓய்வு பெற்ற நீதிபதி ரமேஷ் ரங்கநாதன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷா மேனன் ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழு அமைக்கப்பட்டது.