தில்லியில் சனிக்கிழமை காலை அடா்த்தியான மூடுபனி சூழ்ந்தது. காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, நகரத்தின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) காலை 9 மணிக்கு 355 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: இதற்கிடையில், தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி அதிகரித்து 7.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.8 டிகிரி குறைந்து 22.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.
இதேபோன்று, ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 8.6 டிகிரி, லோதி ரோடில் 8 டிகிரி, பாலத்தில் 8.5 டிகிரி, ரிட்ஜில் 9.8 டிகிரி, பீதம்புராவில் 7.7 டிகிரி, பிரகதிமைதானில் 10.7 டிகிரி, ராஜ்காட்டில் 10.7 டிகிரி மற்றும் சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 9.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிச.28) காலை வேளையில் அடா் மூடுபனி நிலவும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.