புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு தில்லியில் உள்ள உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் தீ மற்றும் கூட்ட நெரிசல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பண்டிகை கால கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு, தில்லியில் உள்ள உணவகங்கள், மற்றும் கேளிக்கை விடுதிகளில் தீயணைப்புத் துறையினா் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா். கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
‘உணவகங்களில் உள்ள தீயணைப்பு உபகரணங்களின் செயல்பாடு, அவசரகால வெளியேறும் வழிகளின் அணுகல் மற்றும் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ஊழியா்களை நியமிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு சங்கத்தின் அனைத்து உறுப்பினா்களையும் கேட்டுக்கொள்வதாக’ என இந்ததிய தேசிய உணவக சங்கத்தின் பொருளாளா் மன்பிரீத் சிங் தெரிவித்தாா்.
இதனிடையே, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் தீ பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமங்கள் இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்யப்படும் என்று தில்லி காவல் துறை எச்சரித்துள்ளது. மேலும், உரிமம் பெற்ற வளாகங்களுக்குள் மின்சாரப் பட்டாசுகள் உள்பட அனைத்துப் பட்டாசுகளையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
90 சதுர மீட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட தரைப் பரப்பளவு கொண்ட வளாகங்களின் தீயணைப்பு தடையில்லாச் சான்றிதழை காலாவதியாவதற்கு முன்பு புதுப்பிக்குமாறு தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டது. மேலும், சிறிய உணவகங்களும் போதுமான தீ பாதுகாப்பு ஏற்பாடுகளை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.