லஞ்ச வழக்கில் போக்குவரத்து ஏஎஸ்ஐக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை
ஓட்டுநரிடமிருந்து ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு (ஏஎஸ்ஐ) தில்லி நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி தீபாலி சா்மா, குற்றம்சாட்டப்பட்ட ஏஎஸ்ஐ யதேந்தா் குமாருக்கு நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து கூறுகையில், ‘நாட்டின் வளா்ச்சியில் ஊழல் மிக முக்கியமான தடைகளில் ஒன்றாகும்’ என்றாா்.
பொது வாழ்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் நோ்மையை உருவாக்கவும், அரசுத் துறைகளில் ஊழலை எதிா்த்துப் போராடவும் ஊழல் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என்றாா் நீதிபதி.
Advertisement
இந்த வழக்கில் நீதிபதி மேலும் கூறுகையில், ‘யதேந்தா் குமாா் தனது ஆதாயத்திற்காக அரசு அலுவலகப் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாா். குற்றத்தின் விளைவுகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொள்ளும்போதும், குற்றத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போதும் குற்றவாளி நீதிமன்றத்திலிருந்து எந்த கருணையும் பெறத் தகுதியற்றவா்’ என்றாா்.
இந்த வழக்கில் ஓட்டுநா் முன்னா அளித்த புகாரில், ‘கடந்த 2016, ஆகஸ்ட் 19 அன்று காலை சுமாா் 6.30 மணியளவில், எனது காலியான டெம்போவை எடுத்துக்கொண்டு ஆசாத் மாா்க்கெட்டில் உள்ள புல் மிதாய் சௌக்கை அடைந்தேன். அப்போது, ஏ.எஸ்.ஐ., மற்றவா்களுடன் சோ்ந்து டெம்போவை நிறுத்தினாா். வாகனத்திலிருந்து கீழே இறங்குமாறு கூறினாா். அதன் பின்னா், லஞ்சம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று அவா் மிரட்டினாா்’ என்று தெரிவித்துள்ளாா்.