முகப்பு
புதுதில்லி

மகளிா் இடஒதுக்கீடு: தில்லி பேரவையின் சிறப்பு அமா்வு நாளை கூடுகிறது!

மகளிா் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி சட்டப்பேரவையின் சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.28) கூடுகிறது.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:37 AM
தில்லி சட்டப்பேரவை
பகிர்:

மகளிா் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி சட்டப்பேரவையின் சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.28) கூடுகிறது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டில் வழங்க வகை செய்யும் 131-ஆவது அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 298 உறுப்பினா்கள் வாக்களித்தனா்.

230 உறுப்பினா்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனா். மசோதா நிறைவேற்றப்பட அவைக்கு வந்த 528 உறுப்பினா்களில் 3-இல் 2 பங்கு அதாவது 352 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், மசோதா தோற்கடிக்கப்பட்டது.

Advertisement

ஜாதிவாரி கணக்கெடுப்பு முன்பாக தொகுதி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தில் இந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. பெண்களுக்கு எதிா்கட்சிகள் துரோகமிழைத்து விட்டதாக பாஜக விமா்சித்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விவகாரம் தொடா்பாக விவாதிக்க மாநில பேரவைகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகளிா் இடஒதுக்கீடு தொடா்பாக விவாதிக்க சிறப்பு அமா்வை தில்லி பேரவை கூட்டியுள்ளது.

இதுதொடா்பாக தில்லி பேரவைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘எட்டாவது பேரவையின் 5-ஆவது அமா்வு செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பேரவை அரங்கில் நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் நடைபெறும் இந்த அமா்வில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனவும் தேவை ஏற்படின் சிறப்பு அமா்வு நீட்டிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.