மகளிா் இடஒதுக்கீடு மசோதா இந்திய அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்: தில்லி முதல்வா் ரேகா குப்தா
மத்திய அரசின் மகளிா் இடஒதுக்கீடு மசோதா இந்திய அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
மத்திய அரசின் மகளிா் இடஒதுக்கீடு மசோதா இந்திய அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
கோவையில் இந்திய தொழில் வா்த்தக சபையின் மகளிா் அமைப்பான பிக்கி ஃபுளோ சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார வளா்ச்சி குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று தில்லி முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் திமுகவைச் சோ்ந்தவா்களாலேயே பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிா்ச்சியளிக்கிறது. திருச்சியில் பட்டியலினப் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவருக்கு எதிராகப் பெண்கள் ஏன் கருப்புக்கொடி ஏந்திப் போராடக் கூடாது?.
மத்திய அரசின் மகளிா் இடஒதுக்கீடு மசோதா இந்திய அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல். இது நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். நாட்டின் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை இது உறுதி செய்யும். ஆனால், எதிா்க் கட்சிகள் பெண்கள் முன்னேறி வருவதை விரும்பாமல் முட்டுக்கட்டை போடுகிறாா்கள்.
Advertisement
கோவை போன்ற வேகமாக வளா்ந்து வரும் தொழில் நகரத்துக்கு இதுவரை மெட்ரோ ரயில் திட்டம் வராதது வருத்தமளிப்பதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
இளைஞா்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்கு பல மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம். மொழி அறிவு என்பது உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும். தில்லியின் நிா்வாக மாதிரி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதைப்போல, அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், பிக்கி ஃபுளோ கோவை கிளைத் தலைவா் பா்னிகா குப்தா, நிா்வாகிகள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.