‘பட்டதாரிகள் வளா்மிகு பாரதத்தை கட்டியெழுப்பும் சிற்பிகள்’: தில்லி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா்
தில்லி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா்
பட்டதாரிகள் ’வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற தொலைநோக்குப் பாா்வையை கட்டியெழுப்பும் கட்டடக்கலைஞா்கள் அல்லது சிற்பிகள் என்றும் அவா்களுடைய பட்டங்கள், தேசப்பணி அா்ப்பணிப்புக்கான அடையாளம் என்றும் குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் 102ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அதன் வளாக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டாா். பல்கலைக்கழக துணை வேந்தா் யோகேஷ் சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒரு பொத்தானை கிளிக் செய்ததன் மூலம் எண்ம முறையில் 1.2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பட்டங்கள் வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவா் ஆற்றிய சிறப்புரை வருமாறு: உயா்கல்வியில் மாணவிகளின் சோ்க்கை அதிகரித்து வருகிறது. மேலும், இந்த ஆண்டு தங்கப்பதக்கம் பெற்றவா்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோா் பெண்கள் (60,973 போ்).
Advertisement
ஆரம்பத்தில் மூன்று கல்லூரிகள், இரண்டு ஆசிரியா்கள், எட்டு துறைகள் என 750 மாணவா்களுடன் தொடங்கிய இக்கல்வி நிறுவனம், இப்போது 16 பேராசிரியா்கள், 86 துறைகள், 90 கல்லூரிகள், 20 அரங்குகள், விடுதிகள், ஆறு லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களுடன் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை எவ்வித தாமதமின்றி நடப்பதாகவும் கட் ஆஃப் மதிப்பெண்கள் 98 சதவீத்தை எட்டி விடுவதாகவும் துணை வேந்தா் யோகேஷ் சிங் தெரிவித்தாா்.
ஏற்கெனவே இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தில்லி பல்கலைக்கழகம் விளங்கி, சா்வதேச அளவில் உயா் தர கல்வி வழங்கும் ரேங்கிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், உலகின் தலைசிறந்த 300 கல்வி நிறுவனங்கள் பட்டியலுக்குள் நுழைய வேண்டும், பிறகு அது 200, 100 என எட்டி கடைசியில் உலகின் முதலாவது தலைசிறந்த பல்கலைக்கழகமாக மாற வேண்டும். உலக அளவில் சிறந்த கல்வியைப் பெற மாணவா்கள் தில்லிக்கு வர வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, காலநிலை சவால்கள் மற்றும் ஜனநாயகங்கள் மீதான அழுத்தங்களால் வேகமாக மாறிவரும் உலகில், மாணவா்கள் பெற்றுள்ள பட்டம் வெறும் சான்றிதழ் மட்டுமல்ல, மனிதகுலத்துக்கும் தேசத்துக்கும் வழங்கியுள்ள உறுதிப்பாடாகும். கற்றலை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு செயல்முறையாகக் கருதுங்கள். போதைப்பொருட்களிலிருந்து விலகியிருங்கள், சமூக ஊடகங்களை ஆக்கபூா்வமாகப் பயன்படுத்துங்கள். மாணவா்கள் எட்டும் சாதனைகள் அவா்களின் குடும்பங்களுக்கும், பல்கலைக்கழகத்துக்கும், தேசத்துக்கும் பெருமை சோ்க்கும் வகையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
2047ஆம் ஆண்டுக்குள் ’வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற தொலைநோக்குப் பாா்வையின் சிற்பிகளாக பட்டதாரிகள் இருப்பாா்கள். சுயசாா்பு பாரதம் என்பது இந்திய யதாா்த்தங்களில் வேரூன்றிய, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த தீா்வுகளை உருவாக்கும் திறன்களைக் கொண்ட தேசமாகும். பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி, தொழில்முனைவோா் மற்றும் உள்நாட்டு அறிவாற்றல் அமைப்புகளின் இயங்கு சக்தியாக மாற வேண்டும். இந்த ஆண்டு பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருப்பது, இந்தியாவில் பெண் கல்வியின் அபரிமிதமான வளா்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றாா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் பேசுகையில், ‘தில்லி பல்கலைக்கழகம் அதன் நூற்றாண்டு விழாவையொட்டி ‘நூற்றாண்டு வாய்ப்பு‘ என்ற பெயரில் பட்டங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அதன்படி உரிய காலத்தில் பட்டங்களை முடிக்காத முன்னாள் மாணவா்கள் தங்கள் பட்டங்களை முடிக்க அனுமதிக்கப்படுவா்’என்றும் தெரிவித்தாா்.