மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்: மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்
"மக்கள்தொகை 2027' சுயகணக்கெடுப்புப் படிவத்தை பொதுமக்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து மத்திய அரசின் கணக்கெடுப்பு முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
நமது சிறப்பு நிருபர்
"மக்கள்தொகை 2027' சுயகணக்கெடுப்புப் படிவத்தை பொதுமக்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து மத்திய அரசின் கணக்கெடுப்பு முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பையொட்டி, குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் இந்திய மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் மற்றும் ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், இந்திய மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் அலுவலக துணை தலைமை இயக்குநர் விஸ்வஜித் தாஸ் ஆகியோர் புதன்கிழமை சந்தித்தனர்.
அப்போது, 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான சுய கணக்கெடுப்புப் படிவத்தை இணையவழியில் குடியரசு துணைத் தலைவர் பூர்த்தி செய்தார்.
மத்திய அரசின் "எண்ம இந்தியா' முன்முயற்சியுடன் "2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு' மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை தரம், செயல்திறன், தரவு சேகரிப்பில் காலந்தவறாமை, தகவல் பகிர்வில் விரிவான எண்மத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தனது சுயகுறிப்பு வழங்கல் விவரம் மற்றும் படத்தை குடியரசு துணைத் தலைவரின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; அனைவரும் சுய கணக்கெடுப்பு நடவடிக்கையில் பங்கேற்று, தத்தமது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தால் அறிவிக்கப்பட்ட காலத்துக்குள் https://se.census.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது மாளிகையில் இந்திய மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து அவரது சுயவிவரக் குறிப்புகளை இணைய வழியில் பதிவு செய்து கொண்டனர்.