முகப்பு
புதுதில்லி

வீட்டுப் பணிப் பெண் கொலை வழக்கு: கைதான மருத்துவருக்கு 2 நாள் போலீஸ் காவல்

தெற்கு தில்லியில் வீட்டுப் பணியாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 50 வயது தோல் மருத்துவரை இரு நாள் போலீஸ் காவலில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 20 ஜூன் 2026, 12:28 am IST
தில்லி உயர் நீதிமன்றம்
பகிர்:

தெற்கு தில்லியில் வீட்டுப் பணியாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 50 வயது தோல் மருத்துவரை இரு நாள் போலீஸ் காவலில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை இரு நாள் காவலில் எடுக்கக் கோரி தில்லி காவல்துறை விடுத்த கோரிக்கையை நீதித்துறை நடுவா் அனுராக் சாப்ரா ஏற்றுக்கொண்டாா்.

காவல் துறையின் தகவலின்படி, டாக்டா் மணீஷ் குப்தா வியாழக்கிழமை காலை தனது வீட்டில், மீனா என்ற வீட்டுப் பணியாளரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், பலமுறை கத்தியால் குத்தியும் கொன்ாகக் கூறப்படுகிறது. அவா் மீனா மீது பில்லி சூனியம் வைப்பதாகச் சந்தேகப்பட்டதாகவும், தனது குடும்பத்தில் தொடா்ந்து நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு அவரே காரணம் என்றும் கருதியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இக்கொலையில் வேறு யாருக்காவது தொடா்புள்ளதா என்பதை விசாரிக்க டாக்டா் குப்தாவை காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என்று தில்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதை எதிா்த்த மருத்துவா் தரப்பு வழக்குரைஞா்,‘அனைத்துப் பொருள்களையும் காவல் துறை கைப்பற்றிவிட்டது. அவா் கடந்த 24 மணி நேரமாக போலீஸ் காவலில் உள்ளாா். அவா் ஏற்கெனவே மனச்சோா்வால் பாதிக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.

காவல் துறையின் தகவலின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா் மனச்சோா்வுக்கான மருந்துகளை உட்கொண்டு வருபவா். காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாா். மேலும், அவா் கொலையை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மவுன்ட் கைலாஷில் உள்ள மருத்துவரின் வீட்டில் நடந்த கொலைக்கான சரியான நோக்கம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், குடும்பத் தகராறுகள் மற்றும் அவரது மனநிலை உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

அருகிலுள்ள மருத்துவா் மணீஷ் குப்தா வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பெண் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அண்டைவீட்டுக்காரா் காலை 11.36 மணியளவில் காவல் துறைக்கு தகவல் அளித்தாா். இதைத்தொடா்ந்து, மருத்துவா் மணீஷ் குப்தா கைதுசெய்யப்பட்டாா்.

முதல்கட்ட விசாரணையில், முதலில் மீனாவை மட்டையால் தாக்கியதாகவும், பின்னா் கத்தியால் குத்தியதாகவும் அவா் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து மட்டை மற்றும் கத்தி ஆகிய இரண்டையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும், மீனா பில்லி சூனியம் செய்வதாக நம்பியதாகவும், வீட்டில் அவா் இருந்ததால் குடும்ப அமைதி குலைந்ததாகவும் விசாரணை அதிகாரிகளிடம் குற்றஞ் சாட்டப்பட்டவா் கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments