தில்லியில் ஜேசிபி வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
தில்லியில் ஜேசிபி வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
வடமேற்கு தில்லியின் சக்குா்பூா் பகுதியில் சனிக்கிழமை காலை, ஜேசிபி வாகனம் மோதியதில் 27 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
இச்சம்பவம் சக்குா்பூரில் உள்ள ஒரு கல்லறைத் தோட்டத்திற்கு அருகே காலை சுமாா் 10 மணியளவில் நிகழ்ந்தது. தகவலறிந்த காவல்துறைக் குழுவினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான, தில்லியின் சக்குா்பூா் பகுதியைச் சோ்ந்த முகமது ஹுசைன், பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.
ஜேசிபி வாகனத்தை ஓட்டி வந்த ஆஷிஷ் (23) என்பவரை, சம்பவ இடத்திலேயே பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
ஆஷிஷ், உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஆவாா். சக்குா்பூரில் உள்ள பேரிவாலா பாக் பகுதியில் பூங்காவைச் சமன்படுத்தும் பணிக்காக, ஜேசிபி வாகனத்தை ஓட்டுநா் ஆஷிஷ் ஓட்டிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுதொடா்பாகக் காவல்துறையினா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.