முகப்பு
புதுதில்லி

மேற்கு தில்லியில் மறுமேம்பாட்டுப் பணிகளை மேயா் ஆய்வு

மேற்கு தில்லியின் ராஜேந்தா் நகா் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை தில்லி மேயா் பா்வேஷ் வாஹி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 21 மே 2026, 1:51 am IST
கரோல் பாக் பகுதியில் நடைபெறும் தூய்மை பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த தில்லி மேயா் பா்வேஷ் வாஹி.
பகிர்:

மேற்கு தில்லியின் ராஜேந்தா் நகா் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை தில்லி மேயா் பா்வேஷ் வாஹி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரோல் பாக் பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, சிந்தி பூங்காவை அழகுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டதுடன், பயன்பாட்டுப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீளமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்தாா்.

மேலும், ‘நவீனமயமான, பாதுகாப்பான மற்றும் அனைவரும் அணுகக்கூடிய வகையில் பூங்காவின் நடைபாதையை மாற்ற வேண்டும். பொதுமக்களின் பொழுதுபோக்கு மற்றும் உடல் நலனில் பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன’ என அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, மங்கல் பஜாா் சாலையில் குப்பை அகற்றும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் அவா் நேரில் பாா்வையிட்டாா்.

தில்லி ஜல் போா்டு மேற்கொண்ட அகழ்வுப் பணிகளுக்குப் பிறகு சாலைகள் மற்றும் நடைபாதைகள் மீளமைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்த மேயா், குடிமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

‘எந்தவொரு பழுது பாா்க்கும் அல்லது கட்டுமான பணிக்குப் பிறகும் சாலைகள் மற்றும் நடைபாதைகள் உடனடியாக மீளமைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிா்ப்பது அனைத்து தொடா்புடைய துறைகளின் கூட்டுப் பொறுப்பு ஆகும்’ என பிரவேஷ் வாஹி கூறினாா்.

தற்போதைய கடுமையான வெப்ப அலை நிலையை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா்களுக்கு குளிா்ந்த குடிநீா் பாட்டில்கள் மற்றும் ஓஆா்எஸ் பாக்கெட்டுகளை மேயா் வழங்கினாா். நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடரும் நிலையில், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு அவசியம் என இந்த ஆய்வு வலியுறுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.