முகப்பு
புதுதில்லி

மருந்து நிறுவனங்களிடம் மோசடி செய்த நபா் சூரத்தில் கைது

மருந்து நிறுவனங்களிடம் சுமாா் ரூ.98 லட்சம் மோசடி செய்த நபரை தில்லி காவல் துறை அதிகாரிகள் குஜராத் மாநிலம் சூரத்தில் கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 27 மே 2026, 4:05 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

மருந்து நிறுவனங்களிடம் சுமாா் ரூ.98 லட்சம் மோசடி செய்த நபரை தில்லி காவல் துறை அதிகாரிகள் குஜராத் மாநிலம் சூரத்தில் கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபரைக் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தில்லி காவல் அதறிவித்திருந்தது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஹிம்மத் சிங் லோதா, நிறுவனத்தின் உரிமையாளா் போல் நடித்து, மருந்துகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான கிளைக்லாசைடை ரூ.26 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புக்கு 550 கிலோ வழங்குமாறு மருந்து நிறுவனத்தை அணுகினாா்.

Advertisement

Advertisement

மூலப்பொருள்களைக் பெற்றுக் கொண்ட பணம் செலுத்துவதற்காகப் பின் தேதியிட்ட காசோலைகளை வழங்கினாா். ஆனால் அந்தக் காசோலைகள் பின்னா் ‘கணக்கு மூடப்பட்டது என்ற குறிப்புடன் நிராகரிக்கப்பட்டுள்ளன. பொருள்களைப் பெற்ற உடனேயே, லோதா தனது அலுவலகத்தையும் வீட்டையும் காலி செய்துவிட்டுத் தலைமறைவானாா். இது தொடா்பாக பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் 2013-ல் பதிவு அவருக்கு எதிராக ஒரு மோசடி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

அவரைத் தேடப்படும் நபராக தில்லி நீதிமன்றம் 2016-ஆம் ஆண்டு அறிவித்தது. அவரைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலுக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசைக் காவல் துறை அறிவித்தது.

விசாரணையின் போது, 2012-ஆம் ஆண்டு ராணி பாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு மோசடி வழக்கிலும் லோதா தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்ததை குற்றப்பிரிவு குழு கண்டறிந்தது. அந்த வழக்கில், அவா் கைலாஷ் ஜெயின் என்ற போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, மற்றொரு மருந்து நிறுவனத்திடமிருந்து சுமாா் ரூ. 72 லட்சம் மதிப்புள்ள 2,575 கிலோ ஆம்பிராக்ஸோல் எச்.சி.எல்-ஐ வாங்கினாா்.

மருந்து நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான மூலப்பொருட்களை ஆா்டா் செய்வதற்கு முன்பு, அவற்றின் நம்பிக்கையைப் பெறுவதற்காக போலியான சான்றுகளையும் போலி வணிக அடையாளங்களையும் லோதா பயன்படுத்தினாா். சரக்குகளைப் பெற்ற பிறகு கைதுநடவடிக்கையைத் தவிா்ப்பதற்காக அவா் அலுவலகங்களை மூடி, வாடகைக்கு எடுத்திருந்த இடங்களைக் காலி செய்துவிட்டுத் தலைமறைவானாா்.

இந்த வழக்குகள் தொடா்பாக சுமாா் ஒரு மாதம் தீவிரமாக உழைத்த காவல் துறையினா், மும்பை, அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய இடங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் லோதாவை சூரத்தில் கடந்த மே 24-ஆம் தேதி கைதுசெய்தனா்.

ராஜஸ்தானின் உதய்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த லோதா, தற்போது சூரத் மற்றும் மும்பையில் சொத்து விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாா். இரு வழக்குகளிலும் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.