திருநெல்வேலி, ஜூலை 9: திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் இலைமறை காயாக இருந்து வந்த கோஷ்டி பூசல் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இளைஞர் காங்கிரஸôர் மற்றும் ராமசுப்பு எம்.பி.யின் ஆதரவாளர்களின் விழாக்களால் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் ஒன்றும் புதிதல்லதான். மாநிலத் தலைவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் கோஷ்டி அரசியல் என்பதையும் தாண்டி, ஒரே தலைவரின் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் உள்ளூரில் தனித்தனி கோஷ்டியாக பிரிந்து நின்று செயல்படுவதால் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட முயன்று வாய்ப்பு கிடைக்காதவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன். வாய்ப்பு பெற்று எம்.பி. ஆனவர் எஸ்.எஸ். ராமசுப்பு. இவர்கள் இருவருமே மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள்தான்.
ஆனால், தேர்தலுக்கு பின்பு இவர்கள் இருவரும் இருவேறு துருவங்களாகிவிட்டனர். தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி.யாக இருந்தபோது அவரைச் சுற்றி வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது ராமசுப்புவிடம் உள்ளனர். கோஷ்டி பூசல் வலுத்தது.
இந்த சூழ்நிலையில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலும் வந்து சேர்ந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேரன்மகாதேவி எம்.எல்.ஏ. வேல்துரையின் மகன் வி.பி. துரையின் வெற்றிக்கு பாடுபட்டார் தனுஷ்கோடி ஆதித்தன்.
துரைக்கு எதிராக ராஜா என்பவரை நிறுத்தி அவருக்காக வேலை செய்தார் ராமசுப்பு எம்.பி. எனினும், துரை வெற்றி பெற்றார். கோஷ்டி பூசல் மேலும் வலுத்தது. ஆனாலும், இலைமறைகாயாக இருந்தது.
இளைஞர் காங்கிரஸில் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்த தொகுதி திருநெல்வேலி என்ற வகையில், அதன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவை முதலாவதாக இங்கே வெள்ளிக்கிழமை நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.
இதனிடையே, சோனியா காந்தி பேரவை சார்பில் காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா, மத்திய அரசின் சாதனை விளக்க விழா, காமராஜர், ராகுல் காந்தி பிறந்த நாள் விழா, கக்கன் நூற்றாண்டு விழா, ராமசுப்பு எம்.பி.க்கு பாராட்டு விழா என
ஐம்பெரும் விழாவை இங்கு சனிக்கிழமை (ஜூலை 10) நடத்த ராமசுப்பு எம்.பி.யின் ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.
அந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமியையும் அழைத்துள்ளனர்.
இந்த ஐம்பெரும் விழா குறித்து தகவல் அறிந்த இளைஞர் காங்கிரஸôர், சோனியா பேரவை என்ற ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பே கிடையாது, போலியான அமைப்பின் பெயரில் விழா நடத்துவதாகக் கூறி சிலர் நிதி வசூலில் ஈடுபடுபடுவதாகவும், அவ்வாறு செயல்படுவோர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். ஆனாலும் ஐம்பெரும் விழா ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாகவே செயல்பட்டு விழா ஏற்பாடுகளைக் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் விழாவில் அதன் அகில இந்திய தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வி.பி. துரை செய்திருந்தார். இந்த விழாவிற்கு வந்து வெகுநேரம் காத்திருந்து கலந்துகொண்டார் ராமசுப்பு எம்.பி. இதில் தனுஷ்கோடி ஆதித்தனும் பங்கேற்றார்.
விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மேடையின் பின்புறம் நின்ற இளைஞர் காங்கிரஸôர் சிலர், ராமசுப்பு எம்.பி.க்கு எதிராக குரல் எழுப்பியதால், ராமசுப்பு அவர்களை நோக்கி கையை நீட்டி சப்தமாகப் பேசி அமைதிகாக்கும்படி கேட்டுக் கொண்டார். அதை இளைஞர்கள் ஆட்சேபிக்க, அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
அப்போது அங்கு நிலவிய அமளியில் யார் என்ன பேசினார்கள் என்றே கேட்கவில்லை. இரு தரப்பினருக்கும் நீண்டநாள்களாக இருந்து வந்த மனக்கசப்பின் வெளிப்பாடு அது என்றார் மேடையில் இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசியவர்களில் சிலரும், இளைஞர் காங்கிரஸின் அகில இந்திய தலைவரான ராஜீவ் சத்தேயும், "சோனியா காந்தி பேரவை' என்ற ஒரு அமைப்பு கிடையாது என்றும், அது கட்சியின் விதிமுறைகளுக்கு முரணானது என்றும் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், ஐம்பெரும் விழாவிற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயரில் வியாபாரிகளை மிரட்டி ரூ.10 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் எஸ். சுந்தரராஜ பெருமாள் எழுத்து மூலம் ராஜீவ் சத்தேயிடம் புகாரும் தெரிவித்தார்.
ஐம்பெரும் விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்துகொள்ளக் கூடாது என்றும் சிலர் அவருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அப்படியே விழா நடைபெற்றாலும் தங்களின் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தன.
இதனால் கோஷ்டி பூசலின் செயல்பாடு தீவிரமடைந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐம்பெரும் விழா எப்படி நடந்தேறப் போகிறது என்பதைக் காண காங்கிரஸ் கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் ஆர்வத்துடன் உள்ளனர். இதனால் விழாவிற்கு பாதுகாப்பை அதிகரிக்க போலீஸôர் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.