சிவகாசியில் சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்கள் அச்சிடும் பணி துவக்கம்
சிவகாசி, மார்ச் 30: சிவகாசியில் சமச்சீர் கல்வித் திட்டப் பாட நூல்கள் அச்சிடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட
சிவகாசி, மார்ச் 30: சிவகாசியில் சமச்சீர் கல்வித் திட்டப் பாட நூல்கள் அச்சிடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை அமைக்க அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை தமிழக அரசு நியமித்தது.
இந்தக் குழுவினர், முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு ஆகிய இரு வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறையை வரும் கல்வி ஆண்டு முதல் கொண்டுவரலாம் என தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தனர். பின்னர் பாடத் திட்டங்களை வகுக்க குழு அமைக்கப்பட்டது.
Advertisement
அந்தக் குழுவினர் பாடத் திட்டங்களை தயாரித்து முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு வைத்தனர். முதல்வர் அவற்றை ஆய்வு செய்து, அனைத்துப் பாடங்களிலும் ஓவியம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மார்ச் 15 ஆம் தேதி பாடப் புத்தகங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, சிவகாசியில் சமச்சீர் கல்விப் பாடத்துக்கான புத்தகங்கள் அச்சிடுவதற்கு 8 நவீன ஆப்செட் அச்சகங்களுக்கு ஒப்பந்தம் மூலம் பணி வழங்கப்பட்டுள்ளது.
புத்தகம் அச்சிடுவதற்குத் தேவையான காகிதம் மற்றும் காகித அட்டையை அரசு வழங்கி விடும்.
புத்தகங்களை ஒவ்வொரு பக்கத்துக்கும் நான்கு வண்ணங்களில் அச்சடித்து, அட்டைக்கு தனியே காகித அட்டையில் நான்கு வண்ணத்தில் அச்சடித்து, அதில் லேமினேட் செய்து பின் அடித்து புத்தகமாக்கி தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இது குறித்து சிவகாசியில் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ள தி சபையர் சினி பிரிண்டோகிராப் என்ற ஆப்செட் அச்சகத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான அ. ஞானசேகரன் கூறியதாவது:
இந்தப் புத்தகம் தரமானதாக இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நான்கு வண்ண ஆப்செட் இயந்திரத்தில் காகிதத்தில் முன்னும் பின்னும் அச்சடித்து, தானியங்கி இயந்திரம் மூலம் மடித்து, பின் அடிக்கிறோம். இதனால் புத்தகம் நேர்த்தியாக உள்ளது. அட்டையில் லேமினேட் செய்கிறோம்.
40 நாள்களுக்குள் புத்தகம் அச்சிடும் பணியை முடிக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டுள்ளது. மின் தட்டுப்பாடு உள்ளதால், ஜெனரேட்டர் அமைத்து புத்தகம் அச்சிடுகிறோம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அச்சிடும் பணிமுடிவடைந்து விடும் என்றார்.