நகருக்கு வெளியே காவல் நிலையம்
சங்கரன்கோவில், பிப். 24: சங்கரன்கோவில் காவல் நிலையம் நகருக்கு வெளியே திங்கள்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு இப் பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சங்கரன்கோவிலில் ஆரம்ப
சங்கரன்கோவில், பிப். 24: சங்கரன்கோவில் காவல் நிலையம் நகருக்கு வெளியே திங்கள்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு இப் பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவிலில் ஆரம்பத்தில் என்.ஜி.ஓ. காலனியில் காவல்நிலையம் செயல்பட்டு வந்தது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள என்.ஜி.ஓ. காலனிக்கு ரயில்வே கேட்டைக் கடந்துதான் செல்ல முடியும்.
காலையில் 3 முறையும், மதியம் 2 முறையும், மாலையில் 1 முறையும், இரவில் 2 முறையும் என சுமார் 8 முறை இந்தத் தண்டவாளத்தில் ரயில்கள் சென்று வந்ததால் காவல்நிலையத்துக்கு அவசர தேவைக்குச் செல்லமுடியாத நிலை உருவானது.
இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்படும் சிறிய பிரச்னைகளால்
கூட சங்கரன்கோவில் நகருக்குள் அடிக்கடி பதற்றம் நிலவுவதாகவும், அதனால் வர்த்தகம் மட்டுமன்றி இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. காவல் நிலையம் தொலைவில் இருப்பதால்தான் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் எளிதில் எழுவதாகவும், குற்றவாளிகள் மிகவும் சுலபமாகத் தப்பிச் சென்றுவிடுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
எனவே, சங்கரன்கோவிலில் நகர காவல் நிலையம் அமைக்கக் கோரி அப்போதைய மாவட்ட எஸ்.பி. கண்ணப்பனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, 2000-ல் சங்கரன்கோவில் மையப் பகுதியான வடக்கு ரதவீதியில் நகர காவல் நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர், அதே பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையமும் கொண்டு வரப்பட்டது. இவை வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்தன.
இந்தக் காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நகராட்சிப் பகுதியில் இடம் ஒதுக்கித் தருமாறு காவல் துறையினர் கேட்டனராம்.
இருப்பினும் தகுந்த இடம் கிடைக்காததால், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள போலீஸ் குடியிருப்பின் ஒரு பகுதியில் நகர காவல் நிலையமும், மகளிர் காவல் நிலையமும் கடந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டன.
இதையடுத்து, திங்கள்கிழமை திடீரென்று நகர காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவை என்.ஜி.ஓ. காலனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தாலுகா காவல் நிலையம் செயல்பட்ட இடத்தில் நகர காவல் நிலையமும், புதிய கட்டடத்தில் தாலுகா மற்றும் மகளிர் காவல் நிலையங்களும் செயல்படுகின்றன.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி காவல் நிலையம் திடீரென்று மாற்றப்பட்டது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், நகரில் பிரச்னைகள் ஏற்படும்போது போலீஸôர் உடனடியாக வருவதில் சிக்கல் ஏற்படும். பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் ஆபத்து உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் செல்லும் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.
எனவே, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் நிலையத்தை மீண்டும் நகருக்குள்ளேயே கொண்டுவர காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரன்கோவில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.