பாளை. அருகே லாரிகள் மோதல்: 2 பேர் சாவு
பாளையங்கோட்டை அருகே மரத்தடிகள் ஏற்றிச் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாளையங்கோட்டை அருகே மரத்தடிகள் ஏற்றிச் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரையிலிருந்து காலி பேரல்களை ஏற்றிக்கொண்டு நாகர்கோவிலை நோக்கி லாரியொன்று சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரை மூனாண்டிபட்டி என்ற இடத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பாக்யராஜ் (28) ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அந்த லாரியில் கிளீனராக அதே இடத்தைச் சேர்ந்த மாயதேவர் மகன் பூபதி (21) என்பவர் இருந்தார்.
Advertisement
Advertisement
பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டியில் நான்குவழிச் சாலையில் சென்றபோது, முன்னால் தூத்துக்குடியிலிருந்து மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென்று மோதியது. இதில் காலி பேரல்கள் ஏற்றிவந்த லாரியின் முன்பக்கம் சிதைந்தது. இதில் லாரியின் முன்பகுதியில் இருந்த ஓட்டுநரும், கிளீனரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஓட்டுநர், கிளீனரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக மரத்தடிகள் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கூட்டமாவு என்ற இடத்தைச் சேர்ந்த அஜீ என்பவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.