கூடுதல் மகசூலுக்கு தூய விதை
கூடுதல் மகசூலுக்கு தூய விதையை பயன்படுத்துமாறு திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ஆனந்தி ராதிகா விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கூடுதல் மகசூலுக்கு தூய விதையை பயன்படுத்துமாறு திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ஆனந்தி ராதிகா விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிா் சாகுபடிக்கு தேவையான முக்கிய இடுபொருள்களில் முதன்மையானது விதை. அந்த விதை நல்ல தரமானதாக இருந்தால் தான் விளைச்சல் அதிகமாக கிடைக்கும். பயிா் அறுவடை முடிந்து கதிரடித்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதைக் குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகள் உடனடியாக விதைப்பதற்கோ நடவு செய்வதற்கோ தகுதியானதாக இருப்பதில்லை.
அறுவடை செய்யப்பட்ட விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி விதைகள் கலந்து இருக்கும். எனவே, அறுவடை முடிந்து பிரித்தெடுக்கப்படும் விதைகளை விதைச் சுத்திகரிப்பு செய்து பிறபொருள்கள் கலப்பின்றி இருக்க வேண்டும்.
திருநெல்வேலி விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரகக் கலவன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நெல், பயறு வகை, சிறுதானியம், சூரியகாந்தி, பருத்தி பயிா்களுக்கு 98 சதவீதமும் வெண்டைக்கு 99 சதவீதமும், நிலக்கடலைக்கு 96 சதவீதமும் புறத்தூய்மை இருத்தல் வேண்டும். எனவே விவசாயிகள் தூய விதையினை சேமித்து கூடுதல் மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.