இம்பாக்ட் பிளேயர் விதி நீடிக்குமா? ஐபிஎல் கேப்டன்களுடன் பிசிசிஐ ஆலோசனை!
ஐபிஎல் 2026 போட்டிக்கு முன்பாக அனைத்து கேப்டன்களுடன் ஆலோசனை நடத்திய பிசிசிஐ குறித்து...
நடப்பு சீசனில் (ஐபிஎல் 2026) இம்பாக்ட் பிளேயர் விதி நீடிக்குமா என்பது தொடர்பாக அனைத்து ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐபிஎல் கேப்டன்கள் குழப்பமான பதிலை அளித்துள்ளதால், அது தொடர்பான முடிவை இப்போதைக்கு எடுக்கப்போவதில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன.
ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் மார்ச். 28ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் முதல்கட்டமாக 20 ஐபிஎல் போட்டிகள் ஏப்.12 வரை நடத்த திட்டமிட்டுள்ளன.
கடந்த 2023 முதல் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியின் எதாவது ஒரு கட்டத்தில் ஒரு வீரரை இரு அணியினர் தேர்வு செய்துகொள்ள இந்த விதி அனுமதிக்கிறது.
இந்த விதியினார் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை குறைவதாக, பலரும் கருத்து தெரிவித்தார்கள். தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் இந்த விதிக்கு எதிராக பேசினார். முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் இதற்கு எதிராகப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடைபெற்ற ஐபிஎல் கேப்டன்களுடனான ஆலோசனையில் மாறுபட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளன. பல கேப்டன்கள் இந்த விதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதால், பிசிசிஐ இந்த சீசனில் எந்த முடிவையும் எடுக்காது என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த இம்பாக்ட் பிளேயர் விதி 2027 வரை இருக்குமென ஏற்கெனவே கூறியிருப்பதால், இந்த சீசனில் மாற்றம் இருக்காதென எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த விதி இல்லாமல் இருப்பதால், ஆல் ரவுண்டர்களுக்கான தேவை குறையுமென்பதாலும் வருங்காலத்தை முன்னிட்டு இந்த விதியை நீக்க வாய்ப்பிருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.