ஐபிஎல் தொடரிலிருந்து பென் டக்கெட் விலகல்! இரண்டு ஆண்டுகள் விளையாடத் தடை!
தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் விலகியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளார்.
இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது, பென் டக்கெட் ரூ. 2 கோடிக்கு தில்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடாததால் சிவப்பு பந்து போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக பென் டக்கெட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் ஒருவர் காயம் காரணமாக விலகுவதை தவிர்த்து, பிற தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதி.
அதன் படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பென் டக்கெட் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடிய பென் டக்கெட் வெறும் 202 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த தொடரில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.