இம்பாக்ட் வீரர் விதி எனக்கு பிடிக்கவில்லை: அக்ஷர் படேல்
ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி தனக்கு பிடிக்கவில்லையென தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி தனக்கு பிடிக்கவில்லையென தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பாக்ட் வீரர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி, ஒரு அணி பிளேயிங் லெவனில் உள்ள எந்த ஒரு வீரருக்குப் பதிலாகவும் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட 5 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் எந்த நேரத்திலும் களமிறக்கலாம்.
இந்த இம்பாக்ட் வீரர் விதிக்கு எதிராக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு இடையூறாக இருக்கும் என ரோஹித் சர்மா விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி தனக்கு பிடிக்கவில்லையென தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு ஆல்ரவுண்டராக ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதி எனக்கே பிடிக்கவில்லை. இம்பாக்ட் வீரர் விதி அறிமுகப்படுத்தப்படும் முன்னர், அந்த இடத்துக்கு நாங்கள் ஆல்ரவுண்டரை அணியில் தேர்வு செய்வோம். ஆனால், தற்போது இம்பாக்ட் வீரர் விதி அறிமுகமாகிவிட்டதால் அணி நிர்வாகம் குறிப்பிட்ட பந்துவீச்சாளர் அல்லது பேட்டரை அணியில் எடுக்கிறது.
இம்பாக்ட் வீரர் இருக்கும்போது எங்களுக்கு எதற்கு ஆல்ரவுண்டர் என அணி நிர்வாகங்கள் கேட்கின்றன. ஒரு ஆல்ரவுண்டராக இருப்பதால், எனக்கே தனிப்பட்ட முறையில் இந்த விதியைப் பிடிக்கவில்லை. ஆனால், ஆட்டத்தில் உள்ள விதிகளை மதிக்க வேண்டும். அதனை பின்பற்றவும் வேண்டும் என்றார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் வீரர் விதி குறைந்தது அடுத்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிகிறது.