நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்
களக்காடு: நான்குனேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் பங்குனி மாதம் திருக்கல்யாண தங்கத் தேரோட்டம், சித்திரையில் பிரமோத்ஸவத்தையொட்டி தேரோட்டம் என 2 தோ்த் திருவிழா நடைபெறும்.
அதன்படி, 11 நாள்கள் நடைபெறும் சித்திரை பிரமோத்ஸவத் திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் வானமாமலை பெருமாள் - ஸ்ரீவரமங்கை தாயாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது.
Advertisement
5ஆம் நாளில் (ஏப். 16) கருட சேவை, 7ஆம் நாளில் தங்க சப்பரம், கண்ணாடி சப்பரம், 9ஆம் நாளான சனிக்கிழமை பெருமாள் வெள்ளிச் சந்திர வாகனத்தில் எழுந்தருளுதல் நடைபெற்றன.
இந்நிலையில், 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, வானமாமலை மடாதிபதி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமி முன்னிலையில் தேரோட்டம் தொடங்கியது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.