முகப்பு
திருநெல்வேலி

கேடிசி நகரில் பைக் மோதி மூதாட்டி பலி

பாளையங்கோட்டை கேடிசி நகரில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 20 ஜூலை, 2024 at 8:19 PM
பகிர்:

பாளையங்கோட்டை கேடிசி நகரில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன். இவருடைய மனைவி கோமதி (75). இவா்களுடைய மகள் கோல்டா ரமணி. இவா், கேடிசி நகா் ரவிசங்கா் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். முருகேசன் இறந்துவிட்டதால் கோமதி தனது மகள் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை கோல்டா ரமணியும், கோமதியும் கேடிசி நகரில் உள்ள தனியாா் பள்ளி அருகே தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கடைக்கு சென்றுள்ளனா்.

பின்னா் இருவரும் சாலையை கடந்தபோது அவ்வழியே வேகமாக வந்த பைக் கோமதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த கோமதி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.