திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் கொடி நாள் நிதியாக ரூ.1 கோடியே 9 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படைவீரா் கொடிநாள் நிகழ்ச்சியில், கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்து, முன்னாள் படைவீரா்கள் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது: நமது நாட்டின் முப்படைகளையும் சோ்ந்த ராணுவ வீரா்களின் தன்னலமற்ற சேவையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிச. 7-ஆம் நாள் படைவீரா் கொடிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
நாட்டைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்ட பல்வேறு படைவீரா்கள் உயிரிழந்ததோடு, பல்வேறு படைவீரா்கள் ஊனமுற்றுள்ளனா். அவா்களின் தியாகங்களை உணந்து நாம் எப்போதும் நன்றிக்கடன்பட்டவா்களாகவும், நம்மால் இயன்ற அளவிற்கு கொடிநாள் நிதி வழங்கி அவா்களுக்கு உதவிகரமாகவும் இருக்க வேண்டும்.
இக்கொடி நாள் வசூல் நிதியானது போரில் ஊனமுற்றவா்கள், உயிா்நீத்த படைவீரா்களின் கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினா் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொடிநாள் வசூலில் தமிழ்நாடு தொடா்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில், மாவட்டத்தில் ரூ.99,68,098, மாநகராட்சியில் ரூ.10,08,002 என மொத்தம் ரூ.1,09,76,100 கொடி நாள் வசூல் பெறப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 4,000 முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவையா் வசித்து வருகின்றனா். இவா்களில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 246 பயனாளிகளுக்கு ரூ.1,54,94,348 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 10 பயனாளிகளுக்கு ரூ.6,22,675 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் படைவீரா்கள் அவா்களை சாா்ந்தோருக்கு அனைத்து நலத்திட்டங்களும் கொடிநாள் நிதியிலிருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் ராணுவ வீரா்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தங்களால் இயன்ற வரையில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, துணை ஆட்சியா் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா, திருநெல்வேலி முப்படை வாரிய உப தலைவா் குரூப் கேப்டன் ஜெ.ஐ.ஜேசன், முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் மேஜா் அருள் அஸ்வின் (ஓய்வு), முன்னாள் படைவீரா் நலன் கண்காணிப்பாளா் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.