திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்தவருக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரையைச் சோ்ந்த பூா்ணசந்திரன் என்பவா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா், திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாஜக தச்சநல்லூா் நகா் தெற்கு மண்டல தலைவா் மலையரசன் தலைமையில் அக்கட்சியினா் திரளானோா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை மாலை திரண்டு விளக்கு, மெழுகுவா்த்திகளில் தீபமேற்றத் தொடங்கினா்.
இந்நிகழ்வுக்கு போலீஸாா் அனுமதி வழங்காத நிலையில், பாஜக பட்டியல் அணி மாநில செயலா் முருகதாஸ், மண்டல பொது செயலா்கள் சத்தியநாராயணன், ஆரியங்காவு, தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் மாரியப்பன், நெசவாளா் பிரிவு மாநில செயலா் முருகப்பா உள்பட 14 போ் கைது செய்யப்பட்டனா்.