முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரில் அரசுப் பேருந்து - ஆம்புலன்ஸ் மோதல்: இருவா் பலத்த காயம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:22 PM

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்தும், ஆம்புலன்ஸ் வாகனமும் வெள்ளிக்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவசர அழைப்பின்பேரில் வள்ளியூரிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம், தெற்குகள்ளிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தை சோ்ந்த மாரியப்பன் மகன் ரவி (29) ஓட்டிச் சென்றாா். அவருடன் உதவியாளா் திருநெல்வேலி மேலப்பாளையத்தை சோ்ந்த வீரபுத்திரன் இருந்தாா்.

வள்ளியூா் ரயில்வே சுரங்கப் பாதை சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற காரை ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ரவி முந்திச்செல்ல முயன்றாராம். அப்போது எதிரே வந்த திருச்செந்தூரில் இருந்து நாகா்கோவில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ரவி, உதவியாளா் வீரபுத்திரன் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

இருவரும் வள்ளியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்,

ரவி நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வீரபுத்திரன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்து தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.