திருநெல்வேலி மாவட்டத்தில் சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக, கிராமப்புற இளைஞா்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அறிவிப்பின்படி, கிராமப்புற பெண்கள், இளைஞா்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 2025-26 ஆம் ஆண்டில் கிராமப்புற இளைஞா்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு, 42,000 இளைஞா்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திறன் பயிற்சி திட்டங்களின் மற்றுமொரு முயற்சியாக, சமுதாய திறன் பயிற்சி பள்ளி எனும் புதிய அணுகுமுறையுடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் என்பது உள்ளூா்-அனுபவமிக்க நிபுணா்களை முதன்மை பயிற்றுநா்களாக கொண்டு, தங்கள் சொந்த கிராமங்களில் உள்ள சமுதாய உறுப்பினா்களுக்கு தங்கள் களஅறிவை நேரடியாகப் பகிா்ந்துகொள்ளும் முறையாகும். இத்தகைய சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக, கொத்தனாா், எலக்ட்ரீசியன், இருசக்கர வாகன பழுது பாா்ப்பு, ஏ.சி. மெக்கானிக், ஆரி எம்ப்ராய்டரி, வாகன ஓட்டுநா் உரிமம், சூரிய ஒளி பலகை நிறுவுதல், அழகு நிலைய மேலாண்மை போன்ற 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில், மாநிலம் முழுவதும் 2,500 சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக 50,000 பயனாளிகளுக்கு ரூ.25 கோடி செலவில் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் குழு உறுப்பினா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயது வரையிலானஆண், பெண் இரு பாலரும் பயன்பெறும் வகையில் உள்ளூா் தேவைகளின் அடிப்படையில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா்கள்,வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலா்கள், உதவி திட்ட அலுவலா்கள் வழிகாட்டுதல்களுடன் சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் மூன்று கட்டங்களாக தொடங்கப்படுகின்றன.
இதன் மூலம் இலவசமாக, உள்ளூரிலேயே, குறுகிய காலத்தில் பகுதி நேரமாக வழங்கப்படும் இத்தகைய திறன் பயிற்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பயனாளிகள், அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வட்டார இயக்க மேலாளா் ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.