முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே காட்டு யானையால் தென்னை மரம், மின்கம்பம் சேதம்

Updated On : 6 மார்ச், 2026 at 1:40 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 11:37 PM

கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான பங்களாக்குடியிருப்பில் உள்ள தனியாா் தோட்டத்தில் காட்டு யானை புகுந்து தென்னை மரத்தைச் சாய்த்ததில் அருகிலிருந்த மின்கம்பமும் முறிந்து விழுந்தது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரக மலையடிவார கிராமமான பங்களாக்குடியிருப்பில் தாமஸ் என்பவரது தென்னந்தோப்பில் புதன்கிழமை இரவு நுழைந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த தென்னை மரத்தை மோதிச் சாய்த்ததில் அருகிலிருந்த மின் கம்பி மீது மரம் விழுந்து. இதில் மின்கம்பம் அடியோடு முறிந்தது. இதையடுத்து, யானை திரும்பிச் சென்றுள்ளது.

கருத்தப்பிள்ளையூா், பங்களாக்குடியிருப்பு, பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானையின் அட்டகாசம் சுமாா் 6 மாதங்களுக்கும் மேல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும் இழப்பு ஏற்பட்டு மீளமுடியாத நிலையில் இருப்பதாகவும் கவலை தெரிவித்தனா். மேலும், யானைகளை கட்டுப்படுத்த கடையம் வனச்சரகப் பகுதியில் விடுபட்டுள்ள பகுதியில் சூரிய மின்வேலிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.