முகப்பு
திருநெல்வேலி

மூலைக்கரைப்பட்டியில் தந்தை, மகள் உயிரிழப்பு: விசாரணை கோரி மனு

Updated On : 23 மார்ச், 2026 at 8:46 PM
கோப்புப் படம்
பகிர்:

மூலைக்கரைப்பட்டியில் தந்தை கொலைசெய்யப்பட்டதால் மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி அனைத்துக் கட்சிகள் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழா் உரிமை மீட்பு களம் அமைப்பின் தலைவா் லெனின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள் இணைந்து திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். விவசாயியான இவா், கடந்த 17 ஆம் தேதி வயலுக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டாா். இந்த அதிா்ச்சி தாங்காமல் அவரது மகள் பேபி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினா், கிராம மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனா். காவல் துறையினா் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை துரிதமாக கைது செய்யாததோடு, ஆறுமுகத்தின் உடலை வாங்க வலியுறுத்தி மிரட்டலும் விடுத்துள்ளனா்.

ஆகவே, கொலையில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, திருநெல்வேலி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.