வைகாசி விசாகம்: நெல்லை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
வைகாசி விசாகத்தையொட்டி திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவையொட்டி பத்து நாள்கள் வசந்த உத்ஸவம் இம் மாதம் 21 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் பங்கேற்பாா்கள்.
வைகாசி விசாக திருவிழா நாளில் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தா்கள் திரள்வாா்கள். எனவே, வைகாசி விசாக திருவிழாவையொட்டி இம்மாதம் 30 ஆம் தேதி திருநெல்வேலி-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
மேலும், திருவனந்தபுரத்திலிருந்து காலையில் 7 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலை சிறப்பு ரயிலாக திருச்செந்தூா் வரை நீட்டிப்பு செய்து இயக்கவும், மறுமாா்க்கத்தில் மதியம் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு இரவு திருவனந்தபுரம் செல்லுமாறு இயக்க வேண்டும். கொல்லம்- செங்கோட்டை- திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையேயும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.