களியக்காவிளையில் சோதனை: 15 வாகனங்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய சோதனையில் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துசுவாமி தலைமையில், களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நெடுஞ்செழிய பாண்டியன், ஆய்வாளர்கள் முருகன், ஆனந்தன், செல்வகுமார், அமர்நாத் ஆகியோரும் சோதனையில் பங்கேற்றனர்.
அப்போது விதிகளைப் பின்பற்றாத 15 வாகனங்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை வாடிப்பட்டியிலிருந்து கேரளத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 23 மாடுகளை ஏற்றிவந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த லாரியை படந்தாலுமூடு மாட்டுச் சந்தைக்கு கொண்டு சென்று மாடுகளை இறக்கி, குறிப்பிட்ட அளவு மாடுகள் ஏற்றிச் செல்ல அறிவுறுத்தினர்.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேலு மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் இப்பகுதியில் தொடர்ந்து வாகனச் சோதனை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.