முகப்பு
கன்னியாகுமரி

விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு செயல் விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளிடையே நவீன தொழில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:06 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளிடையே நவீன தொழில் நுட்ப விழிப்புணர்வு ஏற்படுத்த செயல் விளக்கங்கள் நடைபெறுவதாக வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பொ. ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

நடப்பாண்டில் விதைவிதைக்கும் கருவி, சுழற்கலப்பை, அடிமண் உழவுக் கருவி, குழிஎடுக்கும் கருவி, நேரடி நெல் விதைப்புக் கருவி, நாற்று நடும் இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் 13 செயல் விளக்கங்கள் நடத்தப்படுகின்றன.

பதினெட்டாம்படி பகுதியில் அடிமண் உழவுக் கருவி செயல்விளக்கம், கீழக்காட்டுவிளையில் குழிஎடுக்கும் கருவி செயல்விளக்கம், புத்தளத்தில்  சுழற்கலப்பை, நேரடி நெல் விதைப்புக் கருவி செயல்விளக்கம் நடத்தப்பட்டன.

அடிமண் உழவுக் கருவி பயன்படுத்துவதால் இறுகியிருக்கும் அடிமண் படலம் தகர்த்து நிலத்தின் நீர்வளம், காற்றோட்டத்தை அதிகரிக்கும். மரங்களின் வேர்ப்பகுதிக்கு கனிமங்கள், உரங்கள் எளிதில் கிடைக்கும்.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரக்கன்று நட, வேலிகள் அமைக்க தேவையான குழி தோண்ட குழி எடுக்கும் கருவியைப் பயன்படுத்தலாம். மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, ரப்பர் மரக்கன்றுகளை நட இக் கருவியைப் பயன்படுத்தலாம்.

பயிர் அறுவடைக்குப் பின் நிலத்தை சுழற்கலப்பையால் உழுவதன் மூலம் நிலத்தில் உள்ள பயிர்க்கழிவுகள் சிறுதுண்டுகளாக வெட்டப்பட்டு நிலத்துக்குள்ளேயே இருக்கச் செய்வதால் அவை நிலத்துக்கு உரமாக அமையும். நிலப்பகுதியும் அரை அடிக்குக் குறையாமல் நன்கு கலைக்கப்பட்டு மண் கட்டிகளின்றி சீரான நிலமாகும். இக் கருவியை அனைத்து வகை மண்ணுக்கும் பயன்படுத்தலாம்.

நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் 20 செமீ இடைவெளியில் 8 வரிசையில் சீராக விதைவிதைக்க இயலும். வேளாண் இயந்திரங்கள், கருவியை மானிய விலையில் வாங்க விரும்புவோர் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.