பூதப்பாண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.
தாழக்குடி பேரூராட்சிக்குள்பட்ட சீதப்பால் ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
சீதப்பால் ஊரில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்குள்பட்ட நெடுமங்காடு சாலை அருகில் அரசு அனுமதி இல்லாத கட்டடத்தில் தாழக்குடி பேரூராட்சியின் அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தில் டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனால் அச்சாலை வழியே பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ, மாணவியர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மது அருந்துபவர்கள், சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதே போல் இவர்கள் குடித்து விட்டு விவசாய நிலங்களில் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் சீதப்பால் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.