உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஒட்டுவில்லை மற்றும் கையேடுகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் புதன்கிழமை வெளியிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 23 ஆவது ஆண்டாக மாவட்ட நிர்வாகம், மண்டைக்காடு ஏ.எம்.கே. மது போதை மருத்துவ சிகிச்சை மறுவாழ்வு மையம், மாவட்ட மனநலத் திட்டம் மற்றும் மத்திய அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "போதையைத் தவிர்ப்போம், உடல் நலம் காப்போம்' என்ற விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வுப் பணியைத் தொடங்கிவைத்தார்.
பின்னர், போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை ஆட்சியர் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு 15 ஆண்டுகளாக மறு வாழ்வை மேற்கொண்டுள்ள நபர்களுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்துப் பாராட்டியதுடன், விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மேலும், போதை ஒழிப்பில் தொண்டாற்றும் ஏ.எம்.கே. நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பவதி, ஆலோசகர்கள் சுசீலா, மோல் சுஜித், தனலட்சுமி, ஷாலினி, யோகா பயிற்றுநர் ஜெகன், ஜான் டிக்சன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, உதவி ஆணையர் (ஆயம்) காளிமுத்து, அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் அருளரசு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் குமுதா, நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன், மறுவாழ்வு மைய இயக்குநர் அருள்கண்ணன், மைய இயக்குநர் அருள் ஜோதி, ஏ.எம்.கே. நிறுவன திட்ட மேலாளர் சில்வெஸ்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.