கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கிளையில் இருந்து முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆஸ்டின் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை பணிமனையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்.
கன்னியாகுமரி அரசு பணிமனைக்கு அதிக வருவாயை ஈட்டி தந்த கன்னியாகுமரி -பழனி, கன்னியாகுமரி-பெரியகுளம், கன்னியாகுமரி-ராமேசுவரம் மற்றும் உள்ளூர் வழித்தடங்களான 2 ஏ, 2 ஜி, 1 எம் உள்ளிட்ட பல பேருந்துகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கேட்டு எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைஅலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில், திமுக நிர்வாகிகள் என்.தாமரைபாரதி, எம்.மதியழகன், குமரி ஸ்டீபன், பி.பாபு, த.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கிளை மேலாளரிடம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பேருந்துகளையும் இன்னும் ஒருவார காலத்துக்குள் இயக்குவதாக அவர் உறுதியளித்துள்ளதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.