அரசு விரைவுப் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: சிஐடியூ வலியுறுத்தல்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க நாகர்கோவில் சிஐடியூ கிளையின் 31ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.பொன்குமார் தலைமை வகித்தார். வி.தாமோதரன் பிள்ளை சங்கக் கொடியேற்றினார். உதவித் தலைவர் ஏ.பகவதியப்பன் வரவேற்றார். சிஐடியூ மாவட்ட உதவித் தலைவர் பி.இந்திரா தொடக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில், "அரசு விரைவுப் பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு பின்னர் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. எனவே, பேருந்துக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்; தொழிலாளர்களை இரட்டிப்பு பணிச்சுமைக்கு நிர்பந்திக்கக்கூடாது; விரைவுப் போக்குவரத்துப் பணியாளர்களுக்கு பணி ஓய்வுபெறும் தினத்திலேயே பணபலன்களை வழங்க வேண்டும்; பழுதடைந்த சாலைகளில் பேருந்துகளை இயக்கக்கூடாது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கச் செயலர் டி.எஸ்.ஜான்ராஜன்அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ்.முருகன் வரவு- செலவு அறிக்கை வாசித்தார்.
சிஐடியூ மாவட்ட உதவித் தலைவர்கள் பொன்.சோபனராஜ், கே.பி.பெருமாள், அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்க துணைப் பொதுச்செயலர் எம்.டென்னிஸ் ஆண்றனி, தலைவர் ஜி.செந்தில், சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பொன் குமார், செயலராக ஜான்ராஜன், பொருளாளராக முருகன் உள்பட 20 பேர் கொண்ட நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது. அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலர் எம்.கனகராஜ் நிறைவுரையாற்றினார். உதவிச் செயலர் பி.ஆதிலிங்கம் நன்றி கூறினார்.