காரங்காடு தூய ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் "சாம்பல் புதன்' நிகழ்வுடன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது.
ஈஸ்டர் பெருவிழாவுக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் நோன்பிருந்து ஏழைகளுக்கு உதவுதல், சிலுவைப் பாதை வழிபாட்டில் பங்கேற்றல் என பல்வேறு தவ முயற்சிகளை மேற்கொள்வர்.
இந்தத் தவக்காலத்தின் தொடக்கமாக, கடந்த ஆண்டு குருத்தோலை பவனியில் பயன்படுத்திய ஓலையை சாம்பலாக்கி அதை பங்கு தந்தையர் அர்ச்சித்து, "மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்' என்று கூறி பக்தர்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காரங்காடு தூய ஞானபிரகாசியார் ஆலயத்தில் அருள்பணியாளர்கள் ஜெனிபர் எடிசன், பார்த்தசாரதி, கண்டன்விளை ஆலயத்தில் அருள்பணி சகாயஜெஸ்டஸ், முரசன்கோட்டில் வட்டார முதல்வர் ஜார்ஜ், மாடத்தட்டுவிளை ஆலயத்தில் அருள்பணி ஜெயகுமார், கொன்னகுழிவிளை ஆலயத்தில் அருள்பணி பிரான்சிஸ் சேவியர், முளகுமூடு மறியன்னை ஆலயத்தில் வட்டார முதல்வர் ஹிலாரி, அருள்பணி டோமினிக் கடாட்சதாஸ், சுங்கான்கடை அந்தோணியார் ஆலயத்தில் அருள்பணி ஜெயபிரகாஷ் ஆகியோர் "சாம்பல் புதன்' திருப்பலி நிறைவேற்றினர்.
இந்நிகழ்ச்சி சித்தன்தோப்பு, அப்பட்டுவிளை, மாங்குழி, இரணியல், தக்கலை, கல்குறிச்சி திருவிதாங்கோடு உள்ளிட்ட தேவாலயங்களிலும் நடைபெற்றது.