கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க எச்சரிக்கை பலகைகள்
கன்னியாகுமரி முதல் சொத்தவிளை கடற்கரை வரையிலான பகுதியில் கடலில் மூழ்கி பலியாவதைத் தடுக்கும் பொருட்டு, எச்சரிக்கை பலகையை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் நிறுவியுள்ளனர்.
கன்னியாகுமரி முதல் சொத்தவிளை கடற்கரை வரையிலான பகுதியில் கடலில் மூழ்கி பலியாவதைத் தடுக்கும் பொருட்டு, எச்சரிக்கை பலகையை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் நிறுவியுள்ளனர்.
இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் உள் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இயற்கை அழகை ரசிக்கும் இவர்கள், அங்குள்ள கடற்கரையில் குளித்து மகிழ முயற்சிக்கின்றனர். அப்போது ஆனந்தத்தில் மெய் மறந்து ஆபத்தான, ஆழமான பகுதிகளுக்குள் குளிக்கச் சென்று, கடல் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
அண்மையில் சொத்தவிளை கடற்கரை பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் நண்பர்களுடன் குளிக்கும்போது, அலையில் சிக்கி உயிரிழந்தார். இதேபோன்று, சங்கு துறை, குளச்சல் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும், கடல் அலையில் சிக்கி பலியான சம்பவங்களும் நடந்துள்ளன. இவற்றை தடுக்கும் பொருட்டு, குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், கன்னியாகுமரி முதல் சொத்தவிளை கடற்கரை வரையிலான கடலில் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை புதன்கிழமை நிறுவினர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் டிஎஸ்பி ஸ்டான்லி ஜோன்ஸ், குமரி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் சைரஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.