நாகர்கோவில் தொலைத் தொடர்பு மாவட்டத்தின் சார்பில் குமரி மாவட்டத்தில் தரைவழி தொலைபேசி சிறப்பு மறு இணைப்பு முகாம் மற்றும் ஆதார் எண் இணைப்பு முகாம் , ஜன. 16 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல் மக்கள் தொடர்பு அதிகாரி அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல் தரைவழி தொலைபேசியிலிருந்து தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 6 மணிவரையிலும் மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் முற்றிலும் இலவசமாக பேசும் வசதி உள்ளது .
இந்த சலுகையின் மூலம் வாரத்தில் 69 மணி நேரம் அளவுக்கு முற்றிலும் இலவச அழைப்புக்கள் பேசிடலாம். இந்த சலுகை இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் இதுவரை வழங்கவில்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கெனவே தரைவழி இணைப்புகளைப் பெற்று தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து மேலே குறிப்பிட்ட சலுகையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவன நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு மறு இணைப்பு முகாம்களை நடைபெறுகிறது.
அதன்படி, ஜன.16 ஆம் தேதி கன்னியாகுமரி தொலை பேசி நிலையத்திலும், ஜன.17 ஆம் தேதி தெங்கம்புதூர்தொலைபேசி நிலையத்திலும், ஜன.23 ஆம் தேதி ஈத்தாமொழி தொலைபேசி நிலையத்திலும் இம்முகாம்கள் நடைபெறுகின்றன.
தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு பாக்கி தொகை இருந்தால் , பொருத்தமான சலுகை முறையில் தள்ளுபடி பெற்றுக் கொண்டு, மறு இணைப்பு பெறுவதற்கோ, பாக்கி தொகையைச் செலுத்தி கணக்கை முடித்து கொள்வதற்கோ இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.
இதே போல் இம்முகாம்களில், தொலைபேசி எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணியும் நடைபெறும். மேலும் சிறப்பு சலுகையில் புதிய சிம் கார்டுகளும் வழங்கப்படுகிறது.ஆகவே பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாது இந்த சிறப்பு முகாம்களில் பங்குபெற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.