நாகர்கோவில் குறளக மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி
நாகர்கோவில் குறளகம் சார்பில் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட இலவச கணினி பயிற்சி நிறைவு விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கோட்டாறு ராசகோகிலம் அரங்கில் நடைபெற்றது.
நாகர்கோவில் குறளகம் சார்பில் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட இலவச கணினி பயிற்சி நிறைவு விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கோட்டாறு ராசகோகிலம் அரங்கில் நடைபெற்றது.
காவடியூர் சிவநாராயணப் பெருமாள் தொடங்கிவைத்தார். பன்னாட்டு தமிழுறவு மன்றத் தலைவர் தியாகி கோ.முத்துகருப்பன் தலைமை வகித்தார்.
குறளக நிறுவனர் தமிழ்க்குழவி வரவேற்றார். குமரி மாவட்ட இந்து வித்யாலயா பள்ளிகளின் சிறப்பு ஆலோசகர் ரத்தினசாமி, வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச் செயலர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குறளக மாணவிகள் அருள்நிஷா, ரசிகா, ஜெயஸ்ரீ, 6ஆம் வகுப்பு மாணவி அனு ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளுக்கு இலவசமாக கணினி பயிற்சி அளித்த பொறியாளர் சிவகுமார் பாராட்டப்பட்டார். தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் ஆபத்துகாத்தபிள்ளை, திருக்குறளில் இறையாட்சி என்ற தலைப்பில் உரையாற்றினார். கொட்டாரம் கம்பன்கழகம் ஜோதி அரவிந்தன் கருத்துரையாற்றினார். முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ரத்தினசாமி, இறை ஞானாலயம் சுப்பிரமணியபிள்ளை, கலைவாசல் கோபால், ஒளிவெள்ளம் பிதலிஸ், மருத்துவர் திருஞானசம்பந்தன், தமிழாலயம் தெய்வநாயகப்பெருமாள், பேராசிரியர் கோலப்பதாஸ், தமிழறிஞர் அய்யப்பன், வழக்குரைஞர் ராசகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கடிகை ஆன்றனி நன்றி கூறினார்.