பரக்காணியில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி பாஜக உண்ணாவிரதம்
புதுக்கடை அருகே உள்ள பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, பாஜக சார்பில் பைங்குளம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கடை அருகே உள்ள பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, பாஜக சார்பில் பைங்குளம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தாமிரவருணி ஆறு குழித்துறை, பரக்காணி வழியாக தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியில் சங்கமிக்கிறது. தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பணிகள் தொடங்கிய பின்பு, குழித்துறை ஆற்றில் சுமார் 6 கி.மீ. தொலைவு வரை உப்புநீர் கலக்கிறது. எனவே, ஆற்று நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க பரக்காணி பகுதியில் உடனடியாக தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் துளசிதாஸ் தலைமை வகித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய பாஜக தலைவர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கிவைத்தார். கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
இதில், மாநில துணைத் தலைவர் காந்தி, மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செளந்தர்ராஜன், ஒன்றிய பொதுச் செயலர் குமார், ஒன்றிய துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.