குழித்துறை அருகே போக்குவரத்துக் கழக அதிகாரியை கடத்த முயன்றதாக 4 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே போக்குவரத்துக் கழக அதிகாரியைக் கடத்த முயன்றதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே போக்குவரத்துக் கழக அதிகாரியைக் கடத்த முயன்றதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பகுதியில் அரசுப் பேருந்துகளுக்குப் போட்டியாக தனியார் வேன்கள் பயணிகளை ஏற்றிச்சென்று வருவதாகவும், இதனால் அரசுப் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக குழித்துறை கிளை மேலாளர்கள் சுந்தர்சிங், ஸ்டாலின் உள்ளிட்டோர் புதன்கிழமை குழித்துறை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, தனியார் வேனில் பயணிகள் ஏற்றப்படுவது தெரியவந்தது. அதிகாரிகள் அறிவுறுத்தியும் வேனை ஓட்டுநர் அங்கிருந்து எடுத்துச் செல்லவில்லை.
இதனால், வேனில் ஏறிய சுந்தர்சிங், பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, வேனை களியக்காவிளை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆனால், ஓட்டுநர் வெட்டுவெந்நி நோக்கி வேனை ஓட்டியுள்ளார். இதனால், தான் கடத்தப்படுவதாக சுந்தர்சிங்குக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கும், களியக்காவிளை, புதுக்கடை காவல் நிலையங்களுக்கும் செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அந்த வேனை விரட்டிச் சென்றனர். அப்போது புதுக்கடை பகுதியில் வேனை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ராஜேஷ்குமார் (30) தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், அரசு அதிகாரியைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக, வேன் ஓட்டுநர் ராஜேஷ்குமார், அவரது 3 நண்பர்கள் மீது களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர். இதேபோல, மற்றொரு கிளை மேலாளரான ஸ்டாலின், மற்றொரு வேனில் தன்னை கடத்திச் சென்றதாக வேன் ஓட்டுநர் விஜின்ராஜ் (28) என்பவர் மீது களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுதுத்த போலீஸார் விசாரித்துவருகின்றனர்.