முகப்பு
கன்னியாகுமரி

சாமித்தோப்பு தலைமைப்பதி நிர்வாகத்துக்கு அரசு துணை நிற்க வேண்டும்: ஜி.கே. மணி வலியுறுத்தல்

சாமித்தோப்பு தலைமைப்பதியை அதன் நிர்வாகிகளே நடத்த அரசு துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தினார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி.

Updated On : 29 மார்ச், 2018 at 5:51 AM
பகிர்:

சாமித்தோப்பு தலைமைப்பதியை அதன் நிர்வாகிகளே நடத்த அரசு துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தினார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி.
 குமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதிக்கு புதன்கிழமை வந்த அவர், சாமி தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறியது:
அய்யா வைகுண்டர் சமூகநீதியை நிலைநாட்ட பாடுபட்டார். பெண் விடுதலைக்காகவும் போராடிய உத்தமரான அவரை, நாடார் குல மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில்,  சாமிதோப்பில் அமைந்துள்ள தலைமைப்பதிக்கு அனைத்துத் தரப்பினரும் பெரும் திரளாக வந்து,  அய்யாவை வழிபட்டுச் செல்கின்றனர். தமிழகம் முழுவதும் அய்யாவழி பரவியுள்ளது. ஆயிரக்கணக்கான பதிகள் வந்து விட்டன. 
கேரளத்தில் அய்யா வைகுண்டர் பெயரால் அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டுள்ளது. அவரது பெயரால் விருதுகளும் வழங்கப்படுகின்றன. எனவே, தமிழகத்தில் அவரது புகழை அரசு போற்றிப் பாதுகாக்க வேண்டும். சாமிதோப்பு தலைமைப்பதியை அரசு ஏற்றுநடத்த முன்வந்துள்ளதை பாமக கண்டிக்கிறது. இப்பதியை தொடர்ந்து அதன் நிர்வாகிகளே நடத்த அரசு துணை நிற்க வேண்டும். இது தொடர்பான போராட்டங்களுக்கு பாமக துணை நிற்கும். 
அண்மையில் கர்நாடகத்தில் லிங்காயத் சமுதாயத்துக்கு தனி அந்தஸ்து வழங்கப்பட்டது போல், தமிழகத்திலும் அய்யாவழி மக்களை தனி சமயமாக அங்கீகரிக்க அரசு முன்வர வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது என்றார் அவர்.
முன்னதாக, சாமிதோப்பு அன்புவனம் வந்த அவரை, பாலபிரஜாபதி அடிகளார், மாநில பாமக துணைப் பொதுச்செயலர் எஸ்.கில்மன் புரூஸ் எட்வின், மாவட்ட பாமக செயலர் வி.ஜார்ஜ் கர்ணன், மாவட்ட மகளிரணிச் செயலர் சுயம்புகனி, நாடார் மகாஜன சங்கத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.