முகப்பு
கன்னியாகுமரி

தாழக்குடி அருகே ஆட்டோ மோதியதில் உடைந்து விழுந்த மின்கம்பம்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி அருகே ஆட்டோ மோதியதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. ஆட்டோவில் சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Updated On : 15 மே, 2018 at 12:51 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி அருகே ஆட்டோ மோதியதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. ஆட்டோவில் சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சிறமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தம் (58). ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர், சிறமடம் அருகே உள்ள ஓட்ஸ்புறம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, வெள்ளமடத்தில் இருந்து ஓட்ஸ்புறம் நோக்கி வந்துகொண்டிருந்தார். தாழக்குடிக்கும் வீரநாராயணமங்கலத்திற்கும் இடையே வந்தபோது, திடீரென காற்று பலமாக வீசியது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதியது ஆட்டோ. இதில், மின்கம்பம் இரு துண்டுகளாக உடைந்து விழுந்ததோடு, மின்கம்பிகள் சாலையில் சரிந்தன. இந்நிலையில், மின் கம்பத்தில் இடித்த ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததுடன், ஆட்டோவின் இடிபாட்டில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்டனர்.
மின்கம்பிகள் சாலையில் சரிந்த நேரத்தில், ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்ததால், அதில் வந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக மின் விபத்தில் இருந்தும், காயமின்றியும் உயிர்தப்பினர். இதற்கிடையே, மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.