பேச்சிப்பாறை அருகே முதியவர் மர்மச் சாவு
பேச்சிப்பாறை அருகே மகன் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் உயிரிழந்தது
பேச்சிப்பாறை அருகே மகன் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் வசித்து வந்தவர் செல்லப்பன் (81). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி தாசம்மாள் இறந்து விட்ட நிலையில், இவர் பேச்சிப்பாறை அருகே தோட்டமலையில், கணவரை இழந்த சாந்தா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் இவர்களுக்கு வீடு வழங்கப்பட்டநிலையில் அந்த வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் சாந்தாவும் இறந்து விட்டதால், செல்லப்பனை அவரது முதல் மனைவியின் மகள் சுசீலா கவனித்து வந்தார்.
இந்நிலையில் செல்லப்பன் வசித்துவரும் சமத்துவபுர வீடு தனக்கு வேண்டுமென சாந்தாவின் மகன் ராஜேந்திரன் அடிக்கடி வந்து தகராறு செய்வாராம். மேலும் அந்த வீட்டின் அருகே ஒரு குடிசையையும் அமைத்துள்ளாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராஜேந்திரனும், அவரது மனைவியும் சேர்ந்து செல்லப்பனையும், சசீலாவையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுசீலா இதுதொடர்பாக பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன், குலசேகரம் அரசு மருத்துவமனையில், தனது தந்தையுடன் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் செல்லப்பன் உயிரிழந்தார்.
இதையடுத்து பேச்சிப்பாறை போலீஸார் செல்லப்பனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்லப்பனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.