நியாயவிலைக் கடை அருகே பதுக்கிய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்டம், முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடை அருகே பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம், முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடை அருகே பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் சி. ராஜசேகர் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் கே. முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை மாலையில் முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி நியாய விலைக்கடையின் அருகே சந்தேகப்படும் வகையில் சாக்குமூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்ட போது அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.