மார்த்தாண்டம் அருகே கணவர் வீட்டின் முன் குழந்தையுடன் பெண் தர்னா
மார்த்தாண்டம் அருகே கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, கணவர் வீட்டு முன் குழந்தையுடன்
மார்த்தாண்டம் அருகே கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, கணவர் வீட்டு முன் குழந்தையுடன் இளம்பெண் புதன்கிழமை 2 ஆவது நாளாக தர்னாவில் ஈடுபட்டார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள விரிகோடு, முண்டவிளை பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் மகள் ரமா (24). இவருக்கும் மார்த்தாண்டம் அருகே கோட்டகம் செம்பட்டவிளையைச் சேர்ந்த ரசலையன் மகன் மகேஷ் (32) என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றதாம். மகேஷ் வெளிநாட்டில் கட்டுமான வேலைப்பார்த்து வருகிறார். இத் தம்பதிக்கு 2 வயதில் ரோகித் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இதனிடையே, மகேஷ் தனது செலவுக்காக முறையாக பணம் கொடுப்பதில்லை என அவரது மனைவி ரமா மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தாராம். அதைத் தொடர்ந்து மகளிர் போலீஸார் இருவரிடமும் சமரசம் பேசி சேர்த்து வைத்துள்ளனர். இதையடுத்து, மகேஷ் மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றாராம். குழந்தையுடன் தனது தாயார் வீட்டில் ரமா தங்கியிருந்தாராம்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரம் முன்னர் மகேஷ் சொந்த வீட்டுக்கு திரும்பினாராம். தொடர்ந்து அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதை அறிந்த ரமா தனது குழந்தையுடன் செவ்வாய்க்கிழமை கணவர் வீட்டுக்கு வந்தாராம். அவரை கணவரின் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லையாம். இதனால், வீட்டின் முன் தர்னாவில் அவர் ஈடுபட்டார். இதுவரை, எந்த முடிவும் எட்டப்படாததால் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தை தொடர்ந்தார். இது குறித்து ரமாவின் தாயார் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.