குழித்துறை அருகே காதலியை தேடி வந்த இளைஞரை தாக்கியதாக, இளம்பெண்ணின் தந்தை மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவட்டாறு அருகே வீயன்னூர், குட்டைக்குழி பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜ் மகன் பிபின் (21). இவர் குழித்துறை பழவார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை 6 மாதங்களாக காதலித்து வருகிறாராம். இதையடுத்து பிபினை பெண்ணின் தந்தை கண்டித்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 வாரமாக அப்பெண் பிபினுடன் சரியாக பேசுவதில்லையாம். இதையடுத்து தனது காதலியை தேடி பிபின் இரு நாள்களுக்கு முன்பு பழவார் பகுதிக்கு வந்தாராம். அப்போது அங்குவந்த பெண்ணின் தந்தை மகேந்திரகுமார் (43) பிபினை தடுத்து நிறுத்தி தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த பிபின் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.