மருந்துவாழ் மலை அருகே காட்டுப்பூனையை வேட்டையாடியதாக இருவரை போலீஸார் கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தேர்தல் பறக்கும் படை கல்குளம் வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிசந்தை பகுதியில் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு துப்பாக்கியும் (ஏர் கன்) உயிரிழந்த நிலையில் ஒரு பூனையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸார் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, வேளிமலை வனச்சரக அலுவலர்கள் அங்கு சென்று பார்த்த போது உயிரிழந்து கிடந்த பூனை தமிழ்நாடு வன உயிரின சட்டம் 1972 ன் கீழ் பட்டியல் 1 இல் வரும் காட்டுபூனை என்பதும், அதை வேட்டையாடியது வெள்ளிசந்தை பகுதியைச் சேர்ந்த ராஜா (38) மற்றும் பொன் ஆனந்த் (40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவ்விருவரையும் போலீஸார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மருந்துவாழ் மலைப் பகுதியில் அவர்களுக்கு கோழிப்பண்ணை இருப்பதாகவும், அங்கு கோழிகளை பிடிக்க வந்த காட்டுப்பூனையை துப்பாக்கியால் வேட்டையாடியதாகவும் தெரியவந்ததாம். இதையடுத்து வனத்துறையினர் ராஜா, பொன் ஆனந்த் இருவரையும், கைது செய்ததுடன், துப்பாக்கியையும், காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வெள்ளிக்கிழமை அவர்களை நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.