குமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்ட மலையோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.
இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சாரல் பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அனைத்து பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழை பெருஞ்சாணி அணையின் நீர்வரத்துப் பகுதியான கீரிப்பாறை, சுருளகோடு, தடிக்காரன்கோணம், திட்டுவிளை, பொன்மனை, குலசேகரம், பேச்சிப்பாறை, திற்பரப்பு, கடையாலுமூடு உள்ளிட்ட இடங்களில் கன மழையாக பெய்தது. பிற்பகல் சுமார் 2 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை நீடித்தது. மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
மின்னல் பாய்ந்து கன்று குட்டி சாவு: பேச்சிப்பாறை அருகே சீரோ பாயின்ட் பகுதியில், தொழிலாளி ஜெபராஜ் காளைக் கன்றுகுட்டியை மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். மழைக்கு முன்பாக ஏற்பட்ட மின்னலின் போது கன்றுகுட்டியும் அதன் மீது இருந்த காகமும் மின்னல் பாய்ந்து இறந்தன. மின்னல் காரணமாக குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளிலுள்ள மின்சாதனங்கள் சேதமடைந்தன.