மார்த்தாண்டம் அருகே வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 525 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சிவசங்கர் மற்றும் போலீஸார் ஞாறான்விளை - திக்குறிச்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த வேனின் ஓட்டுநர் போலீஸாரை கண்டதும் வேனை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து போலீஸார் வேனை சோதனை செய்ததில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்களில் மொத்தம் 525 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. வேனுடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை நாகர்கோவில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.